Friday, September 4, 2009

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் களிப்பூட்டும் சிரிப்புக் கவிதைகள்


கல்வியில் பெரியவன் கம்பன் என்ற சொற்றொடர் பிரசித்தம் வாய்ந்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாம்பின் கால்களை இன்னொரு பாம்பினால் தான் நன்கு அறிய முடியும் என்று கூறுவதற்கேற்ப ஒரு புலவராகிய இவர் இன்னொரு பெரும் புலவராகிய கம்பரைப் பற்றி நன்கு அறிந்து நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.



கம்பரின் கவித்திறன் ஆச்சரியமானது என்பது பாரதியின் வாதம். கவி அரசர் தமிழ் நாட்டின் தலைசிறந்த புலவர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் கம்பரை முன் வைத்துப் பேசுவதையும் கம்பர், வள்ளுவர், இளங்கோ என்று கம்பரை முன்வைத்துப் புலவர்களை வரிசைப்படுத்திக் கூறுவதையும் கம்பனென்ற மானிடன் பிறந்து நடமாடிய தமிழ் மண்ணில் தாமும் பிறந்து வாழ்வதை இட்டுப் பாரதியார் பெருமை கொள்வதையும் காண முடிகிறது.




உயரிய கருத்துக்களை ஓசை நயத்துடனும் உவமான அழகுடனும் கவிதை உருவில் எடுத்துக் கூறுவதில் ஈடு இணையற்றவராக இருப்பதுடன் சிரிப்பூட்டும் நகைச்சுவைப் புலமையிலும் கவிச்சக்கரவர்த்தி நிகரற்று விளங்குவதைக் காணலாம். 



இலங்கை வேந்தனான இராவணன் மாலயனுக்கும் எட்டாத நெஞ்சடைக் கடவுளிடம் நெடிய ஆயுளும் கொடிய வாளும் பெற்றான். படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு கொள்ளுப் பேரன் பிரம்மனிடம் இருந்து அரிய பெரிய அஸ்திர ஸ்திரங்களைப் பெற்றவன். சிறந்த சிவ பக்தன். சமயக்குரவர்களில் முதல்வரான திருஞான சம்பந்தர், இராவணன் மேலது நீறு என்று பாராட்டி இருப்பதே இலங்கேசனின் சிவ பக்திக்குச் சிறந்த சான்றாகும். இலங்கேசன் வேதாகமங்களைத் துறைபோகக் கற்ற பெரிய கல்விமான் -பெரிய சங்கீத வித்துவான்.




வீணை மீட்டிச் சாமகானம் பாடி இறைவனை மகிழ்வித்துத் தாயார் வழிபட சிவலிங்கம் பெற்றவன். வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரும் வீரன். இந்த உலகத்திலுள்ள வீராதிவீரர்களையெல்லாம் தோற்கடித்து அமரர் உலகுகளையும் சாடி இந்திரன், யமன் திசை நாயகர்களையும் புறங்கண்ட வீரபராக்கிரமன். முக்கண் இறைவன் உறையும் கயிலை மலையை பெயர்த்தெடுக்க முயன்ற இராவணனின் வீரம் பிரசித்தம் வாய்ந்தது. எட்டுத்திக்கும் புகழ் பரப்பி அரசோச்சிய இலங்கை வேந்தனிடம் தேவர்கள் அடிமை வேலைகள் செய்து உயிர் வாழ்ந்தனர்.




தேவர்கள் இலங்கை நாட்டின் கடலோரங்களையும் மலர் வனங்களையும் காவல் காத்து நின்றனர். இலங்கேசனிடம் ஊழியம் புரியும் தேவரும் பிறரும் வேலைக்குச் செல்லும்போதும் வேலை முடிந்து வீடு திரும்பும் போதும் அரசன் முன் தோன்றி அவன் அனுமதி அளித்த பின்பே வேலைக்கோ வீட்டுக்கோ செல்லவேண்டும். இதற்கென ஒரு குறிப்பிட்ட நேரமும் இருந்தது. காலம் தாழ்த்தி அரசன் முன் வர நேர்ந்தால் அதற்கான தகுந்த காரணம் கூறவேண்டும். தவறினால் தண்டனையும் உண்டு.




ஒருநாள் மாலை பணிமுடிந்து திரும்பிய வானவரும் பிறரும் அவசரமாக இராவணனின் அரசிருக்கையை நோக்கி கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். பிந்தி விட்ட ஒரு அமரர் கூட்டம், குறிப்பிட்ட நேரத்துள் அரச சபைக்குப் போய்ச் சேர்ந்து கொள்ள முடியாது போல் இருக்கிறதே. மன்னன் கோபிக்கப் போகிறானே என்ற பதைபதைப்புடன் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தது.



அவர்கள் ஓடிவரும் அவசர வேகத்தில்அவர்கள் அணிந்திருந்த மார்பு ஆரங்களும் முடியில் சூடிய மாலைகளும் அலங்கோலமாக தாறுமாறாக விழ அணிந்திருந்த ஆடைகளும் அவிழ்ந்து தொங்கின. அரசன் கோபிக்கப்போகிறானே என்று அச்சத்தால் ஒன்றையும் சரிசெய்து கொள்ள நேரமின்றி உரியும் உத்திரியத்தையும் கையில் அள்ளிக் கொண்டு அரசசபையை நோக்கி அமரர்கள் பரிதாபக் கோலத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள் என்ற கவிச்சக்கரவர்த்தி தரும் நகைச்சுவைச் செய்யுள், இலக்கிய ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை. அச்செய்யுள் பின்வருமாறு.


சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
இத்துணை தாழ்ந்தன முனியும் என்று தம்
முத்தினாரங்களும் முடியின் மாலையும்
உத்திரியங்களும் இரிய ஓடுவார்.



சீதாவைத் தேடி இலங்கை வந்த அனுமான் அசோக வனத்தில் ஜானகியைக் கண்டு உரையாடிய மகிழ்சியில் எழிலுறும் அசோக வனத்தை அழித்தான். அதை தடுக்க முயன்ற காவல் வீரர்களையும் கொன்றழித்தான். இராவணனின் பராக்கிரமத்தால் அடங்கி ஏவல் செய்யும் அமரர்களுக்கு மாருதி அசோக வனத்தில் செய்த பேரழிவு மகிழ்சியைத் தந்தது. ஆயினும் வெளிப்பார்வைக்குத் துக்கப்படுபவர்கள் போல் நடித்தனர்.


காலனைப் போல் பயம் தரும் சம்புமாலி அனுமானால் வதையுண்ட போது தேவர்களின் ஆனந்தம் அளவு கடந்தது. ஆயினும் பெரும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு துக்கப்படுபவர்கள் போல் திறமையாக நடித்தனர். உள்ளத்தில் மகிழ்சியும் வெளியில் துயரமுமாக இரட்டை வேடத்தில் தோன்றும் அமரர்கள் அரசன் முன் சென்று சம்புமாலி மடிந்த செய்தியைச் சொல்ல முடியாமல் விக்கி விதிர்த்து விழித்து நின்றார்கள். வானவர்களின் இந்தப்பரிதாபக் கோலத்தைக் கண்ட இலங்கை வேந்தன் குலுங்க நகைத்து அவர்களை இகழ்சியாகப் பார்த்து என்ன சொல்லப் போகிறீர்கள் பயப்படாமல் சொல்லுங்கள் என்று அதட்டினான். இலங்கை மன்னன் மேல் உள்ள பயத்தால் தங்களின் கொடிய எதிரிகள் என உள்ளத்தில் எண்ணும் இராவணனது இலங்கை வீரர்களை நம்மவர்கள் மடிந்தனர் என்று உரிமையுடன் கூறித் தேவர்கள் திறமையாக நடித்தனர் என்பதை கவிச்சக்கர வர்த்தி உயரிய நகைச்சுவையாக கவிதை மூலம் பின்வருமாறு கூறுவதைக் காணலாம்.



புக்கார் அமரர் பொலந்தார் அரசன் பெருவில் பெருங்கோயில்
விக்கார் நின்றார் விளம்பலாற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரசன் நடுக்கல் என்றான் ஜயநம்ம ரெல்லாம்
உக்கார் சம்புமாலி உவந்தான் ஒன்றே குரங்கொன்றார் 



ஒரு குரங்கால் சம்புமாலி உட்பட நம் வீரர்கள் அனைவரும் இறந்தனர் என வருத்தத்துடன் சொல்பவர்கள் போல் தேவர்கள் கூறுகின்றார்கள். நிகரற்ற விறல் வீரனாகிய சம்புமாலி மடிந்தான் என்பதை காதில் நாரசம் போல் ஏற்று வெகுண்ட இலங்கை நாதன் படைகளுடன் சென்று பஞ்ச சேனாதிபதிகளையும் பொருதுமாறு பணித்தான். அணையை உடைத்துக் கொண்டு பாய்ந்து வரும் பெருவெள்ளம் போன்ற இலங்கைப்படைகளையும், சேனாதிபதிகளையும் காற்றின் மைந்தனான மாருதி தானொருவனாகவே நின்று நெடு நேரம் போராடிக் கொன்றழித்தான்.




இராவணனின் மைந்தனான அட்சகுமாரனை அனுமான் கல்லில் சந்தனம் அரைப்பது போல் தரையில் தேய்த்துப் பயங்கரமான முறையில் கொன்றான். அட்சயன் அழிந்தான் என்று அறிந்த போது இலங்கேசனின் அரண்மனையில் அழுகை ஓலம் வானை முட்டியது. மகனைப் பறிகொடுத்த இராவணனது பெரும் தேவி மண்டோதரி கணவனின் கால்களில் விழுந்து அழுது மாய்ந்தாள். தங்களின் மேலான தெய்வ வாழ்க்கையைச் சிதைத்து அடிமைகொண்டு ஏவல் செய்விக்கும் இராவணனின் குடும்பம் தங்கள் கண்முன்னே அல்லோல கல்லோலப் படுவதைக்கண்டு உள்ளுரப் போரானந்தம் கொண்ட தேவர்கள் பொங்கும் மகிழ்ச்சியைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அழுபவர் போல் நடித்தனர். அரண்மனைப் பெண்களுடன் உண்மையாகவே அழுது இரங்குபவர் போல் தசமுகனின் அடிகளில் வீழ்ந்து அழுது வானவர் திறமையாக நடித்தனர் என்பதை கவிச்சக்கரவர்த்தி செய்யுள் மூலம் படம்பிடித்துக்காட்டுகிறார்.




தாவரும் திரு நகர்த் தையலார் முதல்
ஏவரும் இடைவிழுந்து இரங்கி ஏங்கினர்
காவலன் கால்மிசை விழுங்து இரங்கிக் காவல் மாத்
தோவரும் அழுதனர் களிக்கும் சிந்தையர்




இராவண குமாரனின் இறப்பைக்கண்டு உள்ளுர மகிழ்ந்தாலும் வெளியில் அரண்மனைப் பெண்களுடன் சேர்ந்து தேவர்கள் போலியாக அழுகின்றனராம். உள் ஒரு நிலையும் புறம் ஒரு நிலையுமாக கூலிக்கழும் அமரர்களின் பரிதாப நிலையைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகின்றதல்லவா? தமிழினத்தில் இப்படி ஒரு கவி தோன்றியது பெருமைதான். ஆனால் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் புரட்சிக்கவி பாரதிதாஸனும் சொந்தம் கொண்டாடிய திருநீறு பூசும் தமிழ் வேந்தனை தம் காவியம் முழுதும் அரக்கன் என்று இழிந்துரைத்திருப்பது வேதனை தருவதாகவும் உள்ளது.




தம்பலகாமம்.க.வேலாயுதம்


{ படங்கள் இணையத்தில் இருந்து }

Thursday, September 3, 2009

ஒப்பாரி வைத்தரற்றும் ஓலமே !...


தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னிய சிங்கம் அவர்கள் மறைந்தபோது அவர் நினைவாக எழுதிய இது போன்ற மூன்று கவிதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. இதுவே தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் இலக்கிய  முதல் பிரவேசம் ஆகும். 




மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக்கிந்த
பாரினில் துணையுமுண்டோ
எந்தையே தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே நின்பிரிவால்
தவிக்குதே தமிழர் நெஞ்சம்



முன்னை நற் பெருமையோடு
முடிபுனைந் தரசு செய்த
கன்னியெம் தமிழ்த்தாய் ஈன்ற
கடமையில்ச் சிறந்த வீரர்
வன்னிய சிங்கம் என்னும்
வான்புகழ் கொண்ட கோவே
உன்னைநாம் பிரிந்ததாலே
உளமதில் அமைதியற்றோம்



மூப்பினில் தினையளவும்
மூழ்கிடா இளவயதில்
கோப்பாயாம் தொகுதி தந்த
கோமகன் பிரிந்தார் என்னில்
அப்பாவித் தமிழர் கூட்டம்
ஆதரவற்றோராகி
ஒப்பாரி வைத்தரற்றும்
ஓலமே ஈழமெங்கும்




நன்றி சுதந்திரன்




தம்பலகாமம்.க.வேலாயுதம்



Wednesday, September 2, 2009

கவிச் சக்கரவர்த்தி நிகழ்த்திய ருசிகர விளக்க உரை!


நான்காண்டு கற்றும் வகுப்பில் சித்தியெய்தாமல் வறுமையின் தீவிரத்தால் கற்றலை நிறுத்தியவன், வாலிபனாகித் திருமணம் செய்துகொண்ட பின் காட்டில் சென்று விறகுவெட்டிச் சுமந்து வந்து விற்று, அவனும் மனைவியும் மிகக் கஷ்டமாகச் சீவித்து வந்தனர்.



அவன் மனைவி கல்வி கற்காவிட்டாலும் கேட்டல் என்ற முறையில் கற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கேட்டு கொஞ்சம் தன் அறிவை விசாலமாக்கிக் கொண்டாள். அவளுக்குக் கணவன் செய்யும், கால் வயிறு உணவுகூட உண்ணப் போதாத விறகு வெட்டும் தொழில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.


வியர்வை சிந்தாமல், உடை கசங்காமல் அரச சபையில் பாட்டுப் பாடிப் புலவர்கள் அதிகமான பொருள் பெற்றுச் செல்வதாக அறிந்தாள். அப்படித்தான் நாமும் பொருள் பெறவேண்டும் என்று எண்ணிய அவள் விறகு வெட்டக் காட்டுக்குப் போகாமல் சோழ அரசன்மீது பாட்டுப்பாடிப் பெரும் பொருள் பெற்று வருமாறு கணவனிடம் தினமும் சொல்லி வந்தாள்.



நன்றாகக் கற்காத நான் எப்படி பாட்டு எழுதுவது என்று தோன்றாமல் அவன் பைத்தியக்காரன் போல் எழுதுகோலும் ஓலையும் கொண்டு அங்கு மிங்கும் திரிந்தான். அங்கோர் இடத்தில் நாலைந்து பிள்ளைகள் கூடி இருந்து ஒரு பாவைப் பிள்ளையை நடுவில் வளர்த்தி அதன் வாயில் மண்போட்டு மண் உண்ணி மாப்பிள்ளையே என்று பாடிக்கொண்டிருந்தனர்.



அதைக் கண்ட அவன் நம் பாடல் அமைப்புக்கு இதைத் தொடக்கமாகக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு போய் ஓலையில் மண்ணுண்ணி மாப்பிள்ளையே என்று எழுதி பலமுறை படித்துப் பார்த்துக் கொண்டான். விறகுவெட்டி அப்பால் சென்றான். அங்கொரு காகம் விடாமல் கத்திக் கொண்டிருந்தது. குயில் ஒன்றும் குக் கூ என்று கூவியது. காவிறையே, கூவிறையே என்று இந்தப் புதுக் கவிகளுடன் ஏட்டில் எழுதிக் கொண்டான்.



அப்பால் ஒரு கோயில் இருந்தது. இவன் கோயிலடிக்குச் சென்றபோது ஒரு பெரிய பெருச்சாளி ஓடிக் கோயிலுக்குள் புகுந்தது. அதைக் கண்ட இவன், எங்கப்பா எவ்வளவு பெரியது என்று எண்ணியவன், இதை எப்படி எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு உங்கப்பன் கோயில் பெருச்சாளி என்று ஏட்டில் எழுதிக் கொண்டான்.



அடுத்து இருவர் பேசி வாய்த்தர்க்கமிட்டுக் கொண்டிருந்தனர். இவன் அவ்விடம் சென்றபோது, கன்னாபின்னா என்று பேசிக் கொண்டிராதே என்று ஒருவன், மற்றவனை அதட்டினான். அதையும் கன்னா பின்னா என்று எழுதிக் கொண்டு கவி இவ்வளவு போதும் என்று விறகுவெட்டி வீடு திரும்பித் தான் எழுதிவந்த கவிதையை மனைவிக்குப் பின்வருமாறு படித்துக் காட்டினான்.




மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே, கூவிறையே
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா


என்று கவிதையை வாசித்து முடித்தான். பாட்டு நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் கவிதை முடிந்த மாதிரியும் தெரியவில்லை. சோழ அரசனைப் பற்றி ஒரு குறிப்புக்கூட இல்லையே இதற்கு என்ன செய்யலாம் என்று அவன் மனைவி நெடு நேரம் யோசித்து தென்னா சோழரங்கப் பெருமானே என்று இறுதியில் எழுதச் செய்து பாடலை முடிவுறச் செய்தாள். தன்னுடைய கற்பனையும் பாடலில் இடம்பெற்றதை இட்டு அவளுக்கு கொள்ளை மகிழ்ச்சி.




மறுநாள் தான் இயற்றிய பாடலை அரச சபைக்குக் கொண்டுபோக முயன்றபோதுதான் புதுக் கவிஞனுக்கு உதறல் எடுத்தது. ஆயினும் பெண்டாட்டி கூறிய தைரியத்தால் கவிதை ஓலையையும் கொண்டு சமாளித்துக் கொண்டு அரச சபைக்குள் வந்து விட்டான். சோழ மன்னன் சிங்காசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அமைச்சர்கள் அவரவர்க்குரிய இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். சேனாதிபதிகள், அதிகாரிகள் என்று சபை நிறைந்து காணப்பட்டது.



கையில் ஓலையுடன் விறகுவெட்டி வெட, வெட என நடுங்கும் நிலையில் காவலர்கள் நிற்கும் பகுதியில் நின்றிருந்தான். அரச சபையில் இருக்கும் அனைவருக்கும் விறகுவெட்டியை நன்கு தெரியும். வீதியில் இவன் விறகு சுமந்து சென்றதை பலரும் பலமுறை பார்த்திருக்கிறார்கள். இவன் ஏன் இப்போது சபைக்குள் வந்திருக்கிறான். கையில் ஓலையும் வைத்திருக்கிறான். சபையிலுள்ள அனைவரது கண்களும் கவிஞரின் முகத்தில் மொய்த்தன. இந்தக் காட்டு மனிதனை வைத்துக் கம்பர் ஒரு நாடகம் நடத்தப் போகிறார் என்று எரிச்சல் கொண்ட புலவர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டனர்.




அரசர் பெருமானே! சபையோர்களே! அந்த மனிதரைச் சுட்டிக்காட்டி இவர் ஒரு கவிஞர். நம் மன்னரைப் பாராட்டிக் கவிதை எழுதி வந்திருக்கிறார். இவர் சார்பாக நான் அதைப் படிக்கிறேன். கவிதையின் பொருள் கூறவேண்டியது சவைப் புலவனாகிய எமது கடன் என்று கூறிவிட்டு ஓலையைப் பின்வருமாறு வாசித்தார்.

மண் உண்ணி மாப்பிள்ளையே,
கா இறையே- கூ இறையே
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கர்ணா- பின்னா - தென்னா-
சோழரங்கப் பெருமானே



என்று வாசித்துவிட்டு, அழகான போற்றுதல் என்று பாராட்டிய கவிச்சக்கரவர்த்தி புலவர்களே பாடலுக்குப் பொருள் உரையுங்கள் என்றார்.புலவர்கள் ஓலை கொண்டுவந்த மனிதனையும், கம்பரையும் மாறிமாறிப் பார்த்து ஏதோ இரகசியமாக கதைத்து சிரிக்க
முயன்றார்களேயன்றிப் பொருள் கூறுவார் யாருமில்லை. மீண்டும் பொருள் கூறுங்கள் என்று சொல்லியும் யாரும் பேசாததால் யானும் ஒரு புலவனாதலால் எனக்குத் தெரிந்த அளவில் புலவரின் பாடலுக்குப்
பொருள் கூறுகின்றேன் என்றார் கம்பர்.




மண்உண்ணி மாப்பிள்ளையே. கிருட்ணபகவான் குழந்தையாக இருந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது மண்ணை வாரி உண்டார். வளர்ப்புத் தாயார் யசோதை ஓடிவந்து வாயைத் திறடா? என்று அதட்டியபோது வாயைத்திறந்து வாய்க்குள் உலகங்கள் தெரியக்காட்டி எல்லோரையும் ஆச்சரியத்துள் மூழ்கச் செய்தார். இத்தகைய கண்ணபரமாத்வாவின் அம்சமாகத் தோன்றி சோழநாட்டை நல்லாட்சி செய்யும் மன்னர் பிரானே வணக்கங்கள். கா இறையே. குடிமக்களாகிய எங்களை எல்லாவிதமான கஷ்டங்களிலும், துன்பங்களில் இருந்தும் காத்து இரட்சிக்கும் மாட்சிமை தங்கிய வேந்தே. கூவிறையே| தூர இடங்களில் அபாயம் வர இருந்தாலும் கூவி அழைத்துத் துணைவரும் என்று நம்பிக்கை தரும் சோழ அரசு என்னும் வல்லமைச் சக்தியே. உங்க அப்பன் கோயில் பெருச்சாளி உங்கள் தந்தை பெரிய மகாவீரர். சிங்கக் கூட்டத்தில் பாய்ந்தடக்கும் யாளியைப்போல எதிரிகளைப் புறங்கண்டு ஓடச்செய்பவர்.கர்ணா- பின்னா சிறந்த வில் வீரரும் உலகப் புகழ்மிக்க கொடையாளியான கர்ணனுக்குப் பின்வந்த யுதிட்டிரரைப் போன்ற பார் போற்றும் வேந்தே தென்னா சோழரங்கப் பெருமானே தென் பாரதத்தில் சோற்றுக்குப் பஞ்சம் வராத சோழப் பெருநிலத்தை ஆளும் வலுபெற்ற மன்னர் பெருந்தகையே வணக்கம் என்று கவிச்சர்க்கரவர்த்தி தன் உரை கூறலை முடித்தார்.




அரசரைப் போற்றும் இவ்வளவு சிறப்புகளும் விறகுவெட்டி எழுதி வந்த பாடலில் இருக்கிறதா? அல்லது நமது கவிச்சக்கரவர்த்தியின் கற்பனையான வர்ணனையா? என்று சபையோர்கள் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்து கரை ஏற முடியாமல் திண்டாடினார்கள்.




தம்பலகாமம்.க.வேலாயுதம்





{ படங்கள் இணையத்தில் இருந்து }