Saturday, February 27, 2010

நாடு பெற்ற சுதந்திரத்தால் நமக்கு என்ன நன்மை


வெள்ளைக்காரன் விலகிப்போனால்
விடிவு வரும் என்று
கொள்ளை ஆசை கொண்டிருந்தோர்
குடும்ப வாழ்க்கை இன்று
எள்ளளவும் உயர்வு இன்றி
இரந்து உண்ணும் நிலையில்
உள்ளனரே அவர்கள் வாழ்வை
உயரச் செய்ய வேண்டும்.



இந்த நாட்டு மன்ன ரென்ற
ஏற்றம் நமக்கிருந்தும்
சொந்த வீடு காணி இன்றிச்
சோற்றுக் கலைகின்றோம்
மந்திரிமார் மாறி மாறி
வந்து அரசாண்டும்
இந்த ஏழ்மை நிலைமறைய
என்ன செய்தார் அண்ணே



வாக்குக் கேட்டு வீடு தேடி
வாசல்வரை வருவார்
வாக்களித்து மக்கள் சபைக்கு
வந்து விட்டார் என்றால்
வாகனத்தில் அமர்ந் திருந்து
ஊரை வலம் வருவார்
மக்கள் நலன் சிறிதும் எண்ணார்
வந்து பலன் என்ன?



காடு வெட்டி நிலம் திருத்தி
கண்ட பலன் என்ன?
வாட்டுகின்ற வறுமைப் பேயை
அகற்ற வழி அறியா
கேடு கெட்ட மனித வாழ்வு
கிடைத்திட்டதே அண்ணே!
நாடு பெற்ற சுதந்திரத்தால்
நமக்கு என்ன நன்மை?



குடும்பத்திற் கோர் பதவி என்ற
கொள்கை தனை கொண்டால்
நாட்டு மக்கள் நலமாக
வாழ வழி பிறக்கும்
நாடு பெற்ற சுதந்தித்தை
நாமும் பெறக்கூடும்
ஏற்ற இதைச் செய்வதற்கு
ஏன் தயக்கம் அண்ணே!




தம்பலகாமம்.க.வேலாயுதம்



Bookmark and Share





4 comments:

Madurai Saravanan said...

அருமை.சுதந்திரம் கிடைத்து பயன் என்ன அண்ணே! நல்ல வரிகள் மனதை தைக்கிறது.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல கவிதை பகிர்விற்கு நன்றி

vidivelli said...

பிரமாதமுங்க........
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

புலவன் புலிகேசி said...

சுதந்திரம் வெள்ளைக்காரன் கொடுத்தான்..அரசியல் வியாதிகளுக்கும் லஞ்சப் பெருச்சாளிகளுக்கும் மட்டும் பயன் படுத்தினான் இந்தியன்...

Post a Comment